இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ‘சச்சின் – ஆண்டர்சன் கோப்பை’ என்ற புதிய பெயர்? வெளியான தகவல்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறது. அங்கு 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அந்தத் தொடரில் யார் இந்திய அணியின் தலைவராக இருப்பார்கள்? இந்தியா வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதா? என்பன முக்கிய கேள்விகளாக எழுகின்றன.

பட்டோடி கோப்பைக்கு விடை – புதிய தலைமுறை கோப்பை உருவாகும் வாய்ப்பு
2007 முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்தியா டெஸ்ட் தொடர்களுக்கு ‘பட்டோடி கோப்பை’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர், இந்தியாவின் முன்னாள் வீரர்களான இப்திகார் பட்டோடி மற்றும் அவரது மகன் மன்சூர் அலிகான் பட்டோடிக்கு மரியாதையாக வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் சுதந்திரத்திற்கு முன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் விளையாடியவர் என்பதுடன், இருநாட்டு கிரிக்கெட்டுக்கும் முக்கிய பங்களிப்பு செய்தவர்கள்.
ஆனால், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பட்டோடி கோப்பை என்ற பெயரை நீக்கி, புதிய பெயரை வழங்க திட்டமிட்டுள்ளது. இது, பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் உருவாக்கத்தை ஒத்ததாகும். இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு அந்த நாட்டு முன்னாள் வீரர்கள் ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அவர்கள் தலா 10,000 டெஸ்ட் ரன்கள் அடித்துள்ள சாதனையாளர் என்பதால்.
இதையும் படிங்க :இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விராட் கோலி? ஜிம்மி ஆண்டர்சனை எதிர்க்க வாய்ப்பு!
சச்சின் – ஆண்டர்சன் கோப்பை : புதிய யோசனை
அதேபோல், தற்போது இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் தொடருக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பெயரை கோப்பைக்கு சூட்டும் யோசனை இங்கிலாந்து வாரியத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் சச்சின் (200) மற்றும் ஆண்டர்சன் (188) என்பதும், சச்சின் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரராகவும், ஆண்டர்சன் அதிக விக்கெட்டுகள் பெற்ற வேகப்பந்துவீச்சாளராகவும் இருப்பதும், அவர்களுடைய இடத்தை சிறப்பிக்கின்றன.
இந்த யோசனைக்கு பிசிசிஐ-யும் எதிர்ப்பற்ற மனநிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் தெரிவிக்க மறுத்த பிசிசிஐ அதிகாரி கூறியதாவது:
“டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையாளர்களான இவர்களின் பெயர்களை கோப்பைக்கு இடுவது தனித்துவமானது. இது இங்கிலாந்து வாரியம் முன்வைக்கும் நல்ல முயற்சி. பிசிசிஐக்கு எந்த எதிர்ப்பும் இல்லை,” என்றார்.